உரையாட எவரும் அற்ற தனிமை கொண்டவனான கதைநாயகன், தனக்குப் புத்துயிர்ப்புத் தந்த தேவதையாய்க் கொண்டாடும் நஸ்டெங்காவிடம் தன் அக உலகைத் திறந்து காட்டி அன்றாடம் தான் மேற்கொள்ளும் கனவுலக சஞ்சாரத்தை வெள்ளமாய்ப் பொழியும் விவரணை ஒரு துருவமென்றால், எந்த விதமான உலகியல் அனுபவமும் அற்றவளாய்ப் பாட்டியோடு பிணைப்பூசி குத்தப்பட்டு வாழ்ந்து வரும் நஸ்டெங்கா, கபடமற்ற பிள்ளை மொழியில் தன் வாழ்க்கைச் சரிதத்தை அவன் முன் திறந்து காட்டுவது, நேர் எதிரான மற்றொரு துருவம்.
இரண்டு பாவப்பட்ட ஜீவன்கள் தம்மிடையே கொண்டிருக்கும் நேசத்தைக் காதல் என்ற ஒரு சொல்லால் மட்டுமே வரையறுத்துச் சொல்லி விட முடியாதபடி அதற்குத்தான் எத்தனை முகங்கள்?
'அப்படிப்பட்ட பிரியம், இதயத்தைச் சில்லிட வைத்து ஆன்மாவைக் கனக்கச் செய்து விடுகிறது' என்று இந்த நாவலின் கதைநாயகன் ஓரிடத்தில் குறிப்பிடுவது போல வெண்ணிற இரவுகள் மொழிபெயர்ப்புப் பணி என் இதயத்தைச் சில்லிட வைத்து ஆன்மாவைக் கனக்கச் செய்ததுதான்.
எம்.ஏ.சுசீலா