நான் என்ன செய்வேன் ஜீவிதா... உங்கள் மெலிந்த உருவம்... வட்டச் சிறுமுகம்... வராண்டாவில் நடக்கும்போதான புடவைச் சரசரப்பு... அசைவுகள்... புன்னகை... பார்வைகள்... வார்த்தைகள் எல்லாம் நெடும்புதர்களாகச் செழித்துக் கிடக்க நான் அதனூடேதான் குழந்தையைப் போலவும், ஞானியைப் போலவும் நடந்தேன். இந்த சந்தோஷ நேரத்திற்கு - எனக்கு நான் மிகப்பெரியவனாக தோற்றமளிக்கிற இந்த தருணத்திற்கு அன்பு சுரந்து ததும்புகிற இந்த பிரகாச நிலைக்கு - எல்லையற்று விரிந்து விகாசங் கொள்ளும் மனநிலைக்கு - பாடுகள் அத்தனையிலிருந்தும் விலக்கிவைத்த பேருன்னத ஏந்துதலுக்கு - என்றைக்குமாக உங்களுக்கு என் நன்றி.
மஞ்சள் வெயில் நாவலிலிருந்து....